Pages

Sunday 18 January 2015

ரஜினியின் புதுப் படம் - டைரக்டர் யார்?

ரஜினியின் புதுப்படத்தை இயக்கும் டைரக்டர் யார் என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. கோச்சடையான் அனிமேஷன் படத்தை முடித்ததும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினி நடித்தார்.

குறுகிய காலத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களில் சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.


இந்தநிலையில் ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகிறார். இதற்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது புதுப் படத்தை ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று பேசப்படுகிறது.

ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களில் ரஜினி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக தற்போது லிங்காவில் நடித்துள்ளார். இதில் முத்து, படையப்பா படங்கள் வெற்றிகரமாக ஓடி கணிசமாக வசூல் ஈட்டின. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோருமே லாபம் பார்த்தார்கள்.

பி.வாசு இயக்கத்தில் மன்னன், சந்திரமுகி, குசேலன் படங்களில் நடித்தார். இதில் மன்னன், சந்திரமுகி மெகா ஹிட் படமாக அமைந்தது.

ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன் படங்களில் நடித்தார். இந்த படங்களும் லாபம் ஈட்டின. எனவே இந்த டைரக்டர்களிடம் கதை கேட்டு ஒருவரை தேர்வு செய்வார் என பேச்சு அடிப்படுகிறது. இவர்கள் தவிர சுரேஷ் கிருஷ்ணா, சுந்தர்.சி போன்றோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சுரேஷ்கிருஷ்ணா பாட்ஷா என்ற ஹிட் படத்தை ரஜினியை வைத்து எடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆர்வம் உள்ளது. ரஜினி சம்மதித்தால் 2–ம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி வருகிறார். இதற்கான கதையையும் தயார் செய்து வைத்துள்ளார்.

சுந்தர்.சி அருணாசலம் என்ற ஹிட் படத்தை எடுத்தார்.

0 comments

Post a Comment